Thursday 15 September 2016


   உலக நாடுகளிலெல்லாம் தடைசெய்யப்பட்ட தொழிற்சாலைகளுக்கெல்லாம் அனுமதி அளித்து, எங்கெல்லாம் ஆறுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் கொண்டுவந்து தங்களின் சொந்த நன்மைக்காக அவைகளை நிறுவியவர்கள்தான் நம்மை ஆண்டவர்களும், ஆள்பவர்களும்!
  நீர் ஆதாரங்களை பாதுகாக்காமல் அவரவர்களுக்கென தனித்தனியாக கொள்ளைக்கூட்டங்களை வைத்து கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் இவர்கள் மூலமாகத்தான் தீர்வு கிடைக்கும் எனத் தொடர்ந்து  நம்பிக்கொண்டிருக்கிறோம்!
  நீர் நிலைகளை,இந்த மண்ணை,காற்றை மாசுப்படுத்தி மக்களையும்,உயிரினங்களையும் அழித்துக்கொண்டிருக்கும் ஆலைகளையும்,தொழிற்சாலைகளையும் நிரந்தரமாக மூடி வெளியேற்றுவதை விட்டுவிட்டு வெறும் துடைப்பத்தை வைத்துக்கொண்டு இந்தியாவை தூய்மை நாடாக்க முயலும் பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழர்களின் உரிமைப்பற்றியும்,உணர்வுப்பற்றியும்,வாழ்வுப்பற்றியும் என்ன கவலை இருக்கிறது?
  என்றைக்கும் மாறாத சிக்கலாக மாறிவிட்ட காவிரிக்காக இதுவரை எத்தனை எத்தனைத் தீர்ப்புகள்! எத்தனை எத்தனைப் போராட்டங்கள்!
  இவையெல்லாம் தெரிந்தும் நாளை நடக்கவிருக்கும் போராட்டம் ஒவ்வொரு தமிழனின் உணர்வையும்,நமக்கு இழைக்கப்படுகின்ற அநீதியையும் இந்த உலகுக்குச்சொல்லும் போராட்டம்.
  நம்மைவைத்து அரசியல் தொழிலை நடத்துபவர்கள் இதுவரை அனைவரும் ஒன்றிணைத்து எந்தப்போராட்டத்தையும் நடத்தாதவர்கள். ஒரேயொரு முறைகூட ஓரிடத்தில் அமர்ந்து இந்த மக்களின் நலனுக்காக குரல்கொடுக்காதவர்கள். இவர்களுக்கும்,கர்நாடக மாநில அரசின் செயல்பாடுகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.

  மூன்று வேளையும் தவறாமல், பசியில்லாமல் போனாலும் கடிகாரம் பார்த்து சாப்பிடுகிற நாம் இந்தப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். நானும் ஒரு தமிழனாக,ஒரு உழவனாக நாளை போராட்டத்தில் பங்கேற்று என் கடமையை ஆற்றுகிறேன்.


 

No comments:

Post a Comment