Sunday 3 May 2015

சொல்லத் தோணுது 25 - கலையும் கள்வர்களும்!

முதல் காதலன், முதல் காதலி போல முதன்முதலாகப் பார்த்த சினிமாவையும் யாரும் மறந்திருக்கவே முடியாது. தமிழர்களின் வாழ்க்கையைத் திருடிக்கொண்டதில் சினிமாவுக்குத்தான் முதலிடம். இந்த சினிமா இப்படியெல்லாம் பேராசைக்காரர்களையும், திருடர்களையும், பைத்தியக்காரர்களையும் உருவாக்கும் எனத் தெரிந்திருந்தால் தாமஸ் ஆல்வா எடிசனோ பின்னர் அந்த தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்தவர்களோ சற்று சிந்தித்திருப்பார்கள். ஒவ்வொரு இனத்துக்கான, மண்ணுக்கான அடையாளக் கலைகளைக் கூட அழித்தொழித்ததில் சினிமாவின் பங்கே முதன்மையானது.
இரவு வந்தால் தங்கள் கலைகளுட னும், இசையுடனும் கட்டுண்டு கிடந்த மக்கள் பெரிய திரையைப் பார்த்து ஓடிய பின்அத்தனைக் கலைகளும், அதனை நம்பியிருந்தக் கலைஞர்களும் போன இடம் தெரியவில்லை. அது பற்றி எவரும் கவலை கொள்ளவும் இல்லை.
இது பெரும் தொழிலாகவும், வணிகமாகவும் மாறவேண்டும் என்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது இல்லை.
கலையாகப் பார்த்தக் கண்களை விடவும் வணிகமாகப் பார்த்த மூளைகள்தான் அதிகம். பிரான்சு நாட்டில் கண்டு பிடிக்கப்பட்ட சினிமா மூன்று ஆண்டு கால இடைவெளிகளிலேயே உலகம் முழுமைக்கும் போய்ச் சேர்ந்தது. மக்களைச் சென்றடைந்த 20 ஆண்டுகளில் சிந்திக்கத் தொடங்கி ஓட ஆரம்பித்து, உலகில் உள்ள எல்லாக் கலைகளையும் உள்வாங்கிக்கொண்டது. மக்கள் மனசுக்குள் குடிகொண்டு அவர்களை சிந்திக்கச் செய்தது. ஆனால், இது நடந்த தெல்லாம் அயல் நாடுகளில் மட்டும்தான். திரைப்பட மாணவனாக அயல் மொழிப் படங்களை எல்லாம் பார்த்தபோது அவர் கள் அத்தனையையும் 1940 ஆண்டு வாக்கிலேயே செய்துமுடித்துவிட்டதை எண்ணி மலைத்துப் போனேன்.
ஆனால், தமிழ் சினிமா இன்று வரை மக்களை மகிழ்ச்சிப்படுத்த மட் டுமே பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. அல்லது பெருமளவில் மாற்றங்கள் வந்துவிடக் கூடாது என கவலைபட்டுக் கொண்டிருக்கிறது. பல கோடி மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றபோது சில மூளைகள் மட்டும் மாற்றத்தை செய்யத் துடிக்கின்ற படைப்பாளர்களை வணிகம் என்னும் துப்பாக்கியைக் காட்டி பயமுறுத்துகிறது. எவ்வளவு முனைப்போடு சிந்தித்து திரைப்படத்தை உருவாக்கினாலும் அது திரையரங்குகளுக்குச் சென்றால்தானே மக்கள் பார்ப்பார்கள். எனவே வணிகர்கள் கேட்பதை செய்துகொடுத்துவிடுவோம் என அதற்கு மசாலா தூவி, சுவை கூட்டி, ஒப்பனை செய்த சினிமாவாக மாற்றப்பட்டு இறுதியாக திரையரங்குக்கு வருகிறது.
பிள்ளையார் பிடிக்க நினைத்து குரங்காக மாற்றம் கொண்டது போலத்தான் மாற்றங்களை செய்ய நினைக்கிற ஒவ்வொரு படைப்பாளனும் வணிகச் சூழலில் சிக்கிக்கொண்டு விழிபிதுங்கிச் சாகிறான்.
தன் எண்ண ஓட்டத்துக்கு முதலீடு செய்ய யாரும் முன்வராததால், வணிகர்களுடன் சமரசம் செய்துகொள்ள முடியாததால், தாயாரிப்பாளராகி அந்தப் படைப்பாளனும் வேறு வழியில்லாமல் அதே புதைகுழியில் விழுகிறான்.
எந்த மாற்றங்களைச் செய்தாலும் தங்களின் கல்லாப்பெட்டி நிரம்பி வழிகின்ற மாற்றங்களாக இருக்கவேண்டும் என உறுதியாக இருப்பவர்கள்தான் ரசனை வளர்ச்சிக்கிக்குத் தடை என்பது எவ ருக்குமே புரிவதில்லை. இது புரியாமல் ஆளாளுக்கு மதிப்பெண் இட்டுக்கொண்டும், படத்தை திறனாய்வு செய்துகொண்டும் விழுந்து கிடக்கும் படைப்பாளியை எழுந்து நடக்கவிடாமலும், புதிதாக எந்த படைப்புகளும் உருவாகாமலும் பார்த்துக்கொள்கிறார்கள்.
முதலீடு செய்ய யாரும் முன்வராத நிலையில் கந்துவட்டிக்குக் கடன் வாங்கிப் படத்தை முடித்தாலும், வாங்குவதற்கு ஆளில்லை. வேறு வழியின்றி மேலும் விளம்பரத்துக்குப் பணத்தைக் கொட்டி திரையரங்குகளில் இடம் கிடைக்காமல் காத்துக்கிடக்க வேண்டியிருக் கிறது. தணிக்கை வாரியத்தால் தணிக்கை சான்றிதழ் பெற்றத் திரைப்படங்கள் மட்டும் (தமிழில்) 460 படங்களுக்கு மேல் இருக்கும் என்கிறக் கணக்கைவேறு காட்டுகிறார்கள்.
ஒரு காட்சி இரண்டு காட்சிகள் கிடைத்தாலே போதும் என வெளியிட்டால் முதல் நாளிலேயே கள்ளப்படங்கள் வீதிக்கும், வீடு தேடியும் வந்து விடுகின்றன. இந்தத் திருடர்கள் போதாதென்று இணையதளத் திருடர்கள் ஒரு மணி நேரத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள். அத்துடன் உள்ளூர் தனியார் தொலைக்காட்சிகள் பல சிறிதும் பயமில்லாமல் படம் வெளியான இரண்டு நாட்களிலேயே ஒளிபரப்பி யாரும் திரையரங்குக்கு வராமலேயே செய்து விடுகின்றன. ஏற்கெனவே ஒளிபரப்புக்காக விலைக்கு வாங்கிக் கொண்டிருந்த தொலைக்காட்சிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அவர்களுக்குப் பிடித்ததை மட்டும் வாங்குவதால் 95 விழுக்காடுப் படங் களுக்கு அதன் மூலம் கிடைத்த வருமானமும் நின்று போய்விட்டது. இதுபோக நேரம் கிடைக்காதவர்கள் சொந்த வாக னங்களிலும், பேருந்துப் பயணிகள் படுத் துக்கொண்டும் பார்த்து முடித்துவிடுவ தால் ஒவ்வொரு வார வெள்ளிக் கிழமைகளிலும் ஐந்து தயாரிப்பாளர்கள் பிச்சைக்காரர்களாகி தற்கொலை முடிவுக்குச் சென்று விடுகிறார்கள். இந்த வாரம் வெளியான தமிழ்ப் படங்கள் மட்டும் 11. பலகோடி முதலீடு செய்து பெரிய இயக்குநர்கள் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்த வர்களின் நிலையும் இதுதான்.
இந்த எல்லாச் சிக்கல்களும் தெரிந்து தான் சிக்கல்கள் தீர்க்கப்படாமலேயே மேலும் மேலும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுப்படம் தமிழில் உருவாகிக் கொண்டி ருக்கிறது. தீர்த்துவைக்க ஒன்றிணையாத இத்துறையினரால், உலகமெங்கும் அறி வியல் தொழில்நுட்பத்தை வருமானமாக வளர்த்துக்கொண்ட திரைப்படக் கலை தமிழ்நாட்டில் மட்டும் செயற்கை மூச்சுடன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
எல்லோராலும் கைவிடப்பட்ட தமிழ் சினிமாவுக்கு இயற்கை மூச்சுக் கொடுத்து, மீண்டும் நடக்கவிடும் முயற்சியாக சேரன் எனும் தனிமனி தன் போராடி ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். பணத்தை செல வழித்து படம் எடுக்கும் தயாரிப்பாள னுக்கு அந்தப் பணம் திரும்ப வருமென்று எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், அவர் எல்லோரது கவனத்தையும் திருப்பியிருக்கிறார். எரிகிற வீட்டில் புடுங்குகிற வரைக்கும் லாபம் என தயாரிப்பாளனைப் பற்றிக் கவலைப்படாமல், அவனைக் கொன்று கொண்டி ருந்தவர்கள் திக்குமுக்காடிப் போய் இருக்கிறார்கள்.
இன்று மக்கள் ஏன் திரையரங்குகளுக்குத் தேடிச் செல்வது இல்லை? திரைப்படம் மக்களுக்கானது. அது மக்களுக்கான கலை. அதனை மக்களிடத்தில் செல்லாமல் பார்த்துக் கொண்டதன் விளைவுதான் பெரிய திரையில் இருந்த சினிமா இன்று சேரனால் வீடு தேடிப் போயிருக்கிறது.
இனி, ஒரு படைப்பாளி என்ன நினைக்கிறானோ அது சிதையாமல் எந்தத் தரகனிடமோ, வணிக முதலைகளிடமோ மாட்டாமல் மக்களிடத்தில் சென்று சேரும். இன்னும் புதிய படைப்புகளும், புதிய படைப்பாளர்களும் உலகத் தரத்துக்கு உருவாவார்கள். மக்களை வதைத்தெடுக்காத தூய்மையான திரையரங்குகள் மட்டுமே உயிர்பெறும் காலம் தொடங்கிவிட்டது.
முதலீடு செய்யும் முதலாளியான தயாரிப்பாளனுக்கு மலிவு விலையில் அம்மா உணவு. அவர்களின் பணத்தை பிடுங்கிக் கொண்டவர்களுக்கு நட்சத்திர உணவு விடுதியில் எல்லாமும். கடந்த காலங்கள்போல் மீண்டும் சினிமா, தயாரிப்பாளன் எனும் முதலாளிகளின் கைக்கு மாற வேண்டும். அது மாறுவதற்கான அத் தனைத் திட்டங்களையும் செயல்படுத்தி, போட்ட முதலீடாவது கிடைப்பதற்கு உத்தரவாதத்தை ஏற்படுத்த வேண்டும். தேங்கி நிற்கும் படங்கள் வெளியாக வேண்டும். அதுவரை புதியப் படங்கள் தயாரிப்பதையும் வெளியிடுவதையும் நிறுத்தி வைக்கலாம். அது மூன்று மாதமோ, ஆறு மாதமோ ஓர் ஆண்டோ ஆனாலும் ஆகட்டும். அப்போதுதான் செயற்கை மூச்சில் உயிர்வாழும் தமிழ் சினிமா யார் உதவியும் இல்லாமல் எழுந்து நடக்கும்.
- சொல்லத் தோணுது
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

No comments:

Post a Comment