Sunday 3 May 2015

சொல்லத் தோணுது 17 - யாருக்குப் பொங்கல்

ஒரு மாதத்துக்கு முன்பே பல பேருடைய மனதில் பொங்கல் பண்டிகைக் குடிகொண்டுவிட்டது. சூரிய வெளிச்சத்தைக் கண்டால் ஓடி மறைபவர்கள், சூரியனைக் கண் டால் தொப்பியையும் கருப்புக் கண்ணாடி யையும் போட்டுக் கொள்பவர்கள், குடை இல்லாமல் வெளியில் செல்ல முடியாத வர்கள், ஒரு நொடி வியர்வைக்கே மின்சார வாரியத்தை தொலைபேசியில் அழைத்து புகார் தெரிவிப்பவர்கள், குளிர் சாதன வசதி இல்லாமல் ஒரு நிமிடத்தைக் கூட தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் என பொங்கல் பண்டிகைக்காகத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இது தவிர, பரபரப்பாகவாழ்த் துச் சொல்ல, மகிழ்விக்க, நடிகர் - நடிகைகளைத் தேடி ஓடிக் கொண் டிருக்கும் ஊடகக்காரர்களும், எந்தப் படத்தைப் போடலாம் என காத் திருக்கும் திரைப்படத் துறையினரும், விண்வெளிக் கலத்தை விண்ணில் செலுத்திவிட்டு பதைபதைப்புடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களைப் போல், திரைப் படத்தின் வெற்றி - தோல்விக்காகக் காத் திருக்கும் ரசிகர்களும்தான்பொங்கல் திருநாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.
பொங்கல் திருநாள் வந்தால் யார் முகத்தில் மகிழ்ச்சி உருவாக வேண் டுமோ... யாரெல்லாம் கொண்டாடி மகிழ வேண்டுமோஅந்த உழவர்கள் எல்லாம் கடன்காரனுக்கு எந்த பதிலைச் சொல்வது... பொங்கல் செலவுகளை எப்படி சமாளிப்பது... குழந்தை குட்டி களுக்கு துணி எடுக்க யாரிடம் கையேந்துவது என கலங்கிப் போய் நிற்கிறார்கள். ஆனால், மிகச் சிறப்பாக அதாவது ஊடகத்தினர் மொழியில் கோலாகலமாகபொங்கலை தமிழ் நாட்டு உழவர்கள் கொண்டாடி மகிழ்ந்த தாக செய்திகள் வெளியாகத்தான் போகிறது, ஊடகங்களில்!
அதேபோல் மழை பெய்தாலும், காய்ந்தாலும் உழவன் கொத்துக் கொத் தாகத் தற்கொலை செய்துகொண்டு செத்தாலும், எப்போதும் போல் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவிக்க, வாழ்த்துச் செய்திகளை அச்சடித்து வைத்துக்கொண்டு அரசியல்வாதிகளும் காத்திருக்கிறார்கள்.
உழவனுடைய நிலை எப்படியிருந்தா லும், உழவர்கள் பெருவாழ்வு வாழ்வதா கச் சொல்லி ஆள்பவர்கள் வாழ்த்துவதில் ஒரு பொருள் இருக்கிறது. எதிர்க்கட்சியும் மற்ற இதரக் கட்சித் தலைவர்களும்கூட சிறிதும் சிந்திக்காமல் அதே போன்ற வாழ்த்துகளைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பது எந்த விதத்தில் சரியானது?
கரும்பு வெட்டத் தொடங்கி ஆறு வாரமாகிவிட்டது. கத்தியை வைத்து கரும்பை சாய்த்துவிட்டால், அது உடனே ஆலைக்கு ஏற்றப்பட்டு எடை போட்டுவிட வேண்டும். இல்லையென்றால் தாமதிக் கிற ஒவ்வொரு நொடியும் வெய்யி லில் காய்ந்து எடைகுறைந்து கொண்டே யிருக்கும். வெட்டாமல் விட்டு வைத்திருந் தாலும் முற்றிப்போய், பூ பூத்து, சாற்றை இழந்து கரும்பு தக்கையாகிவிடும். கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தச் சொல்லி போராட்டங்கள் நாள்தோறும் நடைபெற்றுக்கொண்டே தான் இருக்கின்றன.
நடுவண் அரசு 2012-ம் ஆண்டு அறிவித்த 1,700 ரூபாயிலிருந்து 2,200 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. ஆனால் தமிழக அரசு அளித்துவந்த 550 ரூபாயை 450 ரூபாயாக குறைத்து அறிவித்திருக் கிறது. உற்பத்திவிலை கூடிப் போனதால் தங்களின் வேதனையை யாரிடத்தில் சொல்வதென நமக்கெல்லாம் இனிக்கும் சர்க்கரையை தரும் உழவன் கசந்து போய் கிடக்கிறான்.
இதுபோக ஏற்கெனவே தனியார் ஆலை நிறுவனங்கள் இவர்களிடம் வைத் திருக்கிற நிலுவைத் தொகையைக் கொடுக்காததால் அத்தனைப்பேரும் வேதனையில் வெந்து கொண்டிருக் கிறார்கள் .
திரைப்பட நடிகர்கள் உண்ணாவிரதம் எனச் சொல்லி வள்ளுவர் கோட்டத் தின் முன் உட்கார்ந்தால், எல்லா தொலைக்காட்சிகளும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்து அங்கே வருகின்ற ஒவ்வொருவரின் வாயிலும் ஒரு ஒலிவாங்கியைக் கொடுத்து நேரலை ஒளிபரப்பைச் செய்கின்றன.
ஆனால், உழவருடைய போராட் டத்தை ஒரு போராட்டமாகவே எவருமே பார்ப்பதில்லை. சென்ற மாதம் டெல்லி வரைக்கும் சென்று நாடாளுமன்றத்தின் முன் இந்தக் கடுங்குளிர் பருவத்திலும் வேட்டி - சட்டையுடன் கிடந்து கத்திப் பார்த்தார்கள். இவர்கள்செத்துத் தொலைந்தால்தங்கள் கட்சிக்குத் தான் இழுக்கு என நினைத்த அமைச் சர்கள், பழச்சாறு கொடுத்து படம் எடுத்துக்கொண்டு அனுப்பி வைத்து விட்டார்கள்.
எந்தப் பொருளை யார் உருவாக்கி னாலும், அதற்கான விலையை அவன் குறித்துக்கொள்ள முடியும். உழவ னுக்கு மட்டும்தான் அந்த உரிமை இல்லை. வணிகர்கள் கேட்கிற விலைக் குக் கொடுத்துவிட்டு எப்போது பணம் கொடுப்பார்கள் என காத்திருக்க வேண் டும். பல நேரங்களில் விலையில்லை எனச் சொல்லி திருப்பி அனுப்பி விடுவதால், வீதியில் கொட்டிவிட்டு வீடு வந்து சேர்கிறான். அப்போதுகூட உழவனின் நிலையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், ஓடிப் போய் போட்டிப் போட்டு அள்ளிக் கொள்பவர்களும் நம் மதிப்புக்குரிய மக்கள்தான்.
வேலை செய்கிற நாட்களுக்கும், விடுமுறை நாட்கள் எனச் சொல்லி வேலை செய்யாத நாட்களுக்கும் சேர்த்து ஊதிய மும்; அதுபோக, ஊக்கத் தொகை என அனைத்தையும் பெற்றுக்கொள்கிற பல்வேறு அலுவலக ஊழியர்களுக்கும் பொங்கல் திருநாள்தான். தலைமுறைத் தலைமுறையாக கடனி லேயே உழன்று, வறுமையிலேயே செத்து மடிகிற உழவனுக்கும் பொங்கல் தான். அனைவருடைய வயிற்றுக்கும் உணவளித்துவிட்டு யார் கையையும் எதிர்பார்த்து வாழாத உழவன், அரசாங் கம் கொடுத்த 100 ரூபாயை வாங்குவதற் காக வெய்யிலில் வரிசையில் காத்துக் கிடந்த காட்சிகளையும் கண்டுகொண்டு தான் இருந்தோம்.
உழவனின் குரல் ஓங்கி ஒலித்த காலங்களும் உண்டு. இறுதிவரைப் போராட்டத்தை ஒடுக்க முடியாமல், வேறு வழியில்லாமல் உழவர் சங்கத் தலைவரை சந்திக்க, புதுடெல்லியில் இருந்து அப்போது தலைமை அமைச்ச ராக இருந்த இந்திரா காந்தியும், சென்னையில் இருந்து முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனும் அவருடைய கிராமத்துக்கேச் சென்று பேசித் தீர்த்ததெல்லாம் அன்று நடந்தன.
யார் ஆட்சிக்கு வந்தாலும் அவன் குறை தீர்ந்தபாடில்லை. அவனது சிக்க லின் அடிவேரை ஆராய்ந்து பார்க்கத் தெரியாததாலும், விரும்பாததாலும் வெறும் இலவசங்களையும், மானியங் களையும் கொடுத்து தப்பித்துக் கொள்கிறார்கள்.
உழவனின் மரபுக் குடிகளெல்லாம் உடம்பில் தீப்பிடித்துக் கொண்டதுபோல் தன் கிராமத்தை விட்டும், தன் நிலத்தை விட்டும் வெளியூருக்கும், வெளி நாட்டுக் கும் ஓடிவிட்டன. மீதமுள்ளவர்களும் ஓடிப் போக நெடுங்காலமாகாது. அப் போது இன்று கொண்டாடுவதுபோல் உழவனின் பெயரைச் சொல்லி பொங் கல் திருநாளைக் கொண்டாட முடியாது.
ஏற்கெனவே உழவன் இல்லாத பொங்கலும், கால்நடைகள் இல்லாத மாட்டுப் பொங்கலும் நம்மவர்களால் உருவாக்கப்பட்டுவிட்டன. இல்லைநாங்கள் பொங்கல் கொண்டாடியே தீருவோம். உழவன் அழிந்தால் எங்களுக்கென்ன? நாங்கள் தமிழர்கள்எனச் சொல்லி கொண்டாடலாம். அப்படி யானால் தமிழர்களாக இருக்கின்ற கிறித்துவர்களும், இசுலாமியர்களும் பொங்கலைக் கொண்டாட வேண்டு மல்லவா? அவர்களும் இந்த உழவுத் தொழிலை செய்கிறவர்களும், செய்த வர்களும்தானே. இதை ஒரு மதம் சார்ந்த பண்டிகையாக மாற்றியவர்கள் யார்? உணவளிக்கும் சூரியனுக்கு நன்றி சொல்லும் நாள் என்றால் அப்படி ஒன்றை நாம் எல்லோரும் கொண்டாடுவதுதானே சரி?
உலகத்தில் எந்த மொழியிலாவது ஓர் அரசாங்கம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும்எனச் சொல்லியிருப் பார்களா?
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயரும்!
- என ஒளவை பாடியது போல நடந்தால் அப்போதுதான் அது அரசாட்சியாக இருக்கும். ஆனால், இங்கே எதெல்லாம் உயர்ந்துகொண்டு இருக்கிறது என்பதை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்.
திருக்குறளையும், திருவள்ளுவன் புகழையும் பரப்பி அவனுக்கு சிலை வைத்துவிட்டால் தமிழன் வாழ்ந்துவிடு வான் என நினைப்பவர்களுக்கு, ஒளவையின் இந்தப் பாடலை நினைவு படுத்த விரும்புகிறேன். வள்ளுவனை ஒருவேளை ஆட்சி யாளர்கள் மதித்தால் (நடுவண் அரசையும் சேர்த்துதான்) வள்ளுவன் பாடியிருக்கிற ஒரு குறளின்படியாவது உழவுத் தொழிலை முன்னேற்றும் காரியத்தை முதலில் செய்து காட்டுங்கள்.
- இன்னும் சொல்லத்தோணுது
எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmail.com

No comments:

Post a Comment