Sunday 15 June 2014

தமிழ்நாடு என்ற பெயரையே நீக்கிவிடலாம்!

அன்பு தோழமையினருக்கு,


15-06-2014 "தி இந்து" தமிழ் நாளிதழில் எனது நேர்காணல். 



தங்களின் நேர்மையான கருத்தும், மற்றவர்குளடனான பகிர்தலும் தேவை.

அன்போடு,

தங்கர் பச்சான்.

தமிழ்நாடு என்ற பெயரையே நீக்கிவிடலாம்!
தங்கர்பச்சான் நேர்காணல்




ங்கர்பச்சானின் சமீபத்திய இலக்கு இளைஞர்கள். தேடித்தேடிப் போய் பேசுகிறார். குறிப்பிட வேண்டிய விஷயம் தன்னுடைய பேச்சில் சாதியத்துக்கு எதிரான போருக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறார். மனிதரிடம் பேசவா விஷயம் இல்லை? பேசினேன்.    
மராத்திய படமான 'ஃபன்றி'க்கு (Fandry) விருது கிடைக்க திரைப்படத் தேசிய விருதுகளுக்கான நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்த நீங்களும் ஒரு காரணம் என்கிறார்கள். அப்படியென்ன விசேஷம் அந்தப் படத்தில்?

இந்திய சினிமாவே ஃபன்றி படத்துக்காக பெருமைகொள்ள வேண்டும். ஃபன்றி என்ற படத்தின் தலைப்பே சாதீயத்தின் இழிநிலையை சுட்டும் ஒன்றுதான். சாதி அடுக்கிலிருந்து மீளமுடியாத ஒரு மராட்டிய கிராமத்தில் கதை நடக்கிறது. அதை ஒரு பேச்சுக்காக வேண்டுமானால் நாம் கதை என்று சொல்லலாமே தவிர, அந்தப் படத்தில் உள்ளதைவிட மோசமானதாக தலித்துகளின் வாழ்நிலை இன்றும் இருக்கிறது. பன்றி படத்தின் நாயகன் பதின்பருவத்தில் இருக்கும் ஒரு பள்ளி மாணவன். ஆதிக்க சாதியைச் சேர்ந்த தனது சக பள்ளி மாணவியை மனசுக்குள் தனது காதலாக வரித்துக் கொள்கிறான். அவளை கிராமத்தின் எல்லா தருணங்களிலும் பார்த்துக்கொண்டே இருக்கிறான். ஆனால் அவளுக்கு அவன் மீது அப்படி எந்த உணர்வும் கிடையாது. ஒரு தலித்தாக தனது தாழ்நிலையை, ரத்தத்தில் ஊறிப்போன தனது வலியை எங்கே அவள் பார்த்துவிடுவாளோ என்று அவன் பதறியது ஒருகட்டத்தில் அரங்கேறுகிறது. அவனை இழிந்த விலங்கினைவிட கேவலமாகச் இந்தச் சமூகம் பார்க்கிறது. அப்போது கோபத்தில் அந்த இளைஞன் வீசியெறியும் கல், கேமரா நோக்கி வந்து பார்வையாளன் முகத்தைத் தாக்குகிறது. அவன் விட்டெறிந்ததை நான் கல்லாக எடுத்துக் கொள்ளவில்லை. செருப்பாகத்தான் எடுத்துக்கொண்டேன். இந்தப் படத்தைப் பார்க்கும் தலித் அல்லாத பார்வையாளன் கண்டிப்பாக என்னைப் போலத்தான் உணர்வான்.   

இந்தப் படைப்பு தலித் கலைஞர்களின் அதிமான பங்கேற்பால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. என் போன்றவர்களால் தலித்துகளின் புண்களைப் பார்த்து வேதனைப்பட முடியுமே தவிர அவர்களின் உயிர்போகும் வேதனை அவர்களால் மட்டுமே வெளியே சொல்ல முடியும். அதேபோல்தான் தலித்துகளின் வலியை தலித்துகள்தான் படமாக்க முடியும். நம்மிடம் இந்தப் படத்தின் இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே போன்ற கலைஞர்கள் இருக்கிறார்கள். தங்களின் கலையறிவை, தம் மக்களின் விடுதலைக்கு பயன்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டதை ஃபன்றி படம் நமக்கு உணர்த்துகிறது.
மயிலாடுதுறையில் அம்பேத்கரின் 123-வது பிறந்த நாள் கூட்டத்தில் பேசிய நீங்கள்தனித் தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற தலித் உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக கேள்விக்குள்ளாக்கியிருக்கிறீர்களே?

உண்மைதான்! புரட்சியாளர் அம்பேத்கரை தங்கள் கட்சிகளின் முதன்மை அடையாளமாக முன்னிருத்தும் இந்திய தலித் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் அவர்களின் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும்... அண்ணல் சொன்னதைத்தான் நீங்கள் செய்கிறீர்களா?
 'எதிர்காலத்தில் என் மக்களை இந்த அரசியல் வியாபாரிகள் விலைக்கு வாங்கிவிடுவார்கள்' என்று அன்றைக்கு அவர் சொன்னதுதானே இன்றைக்கு நடந்திருக்கிறது!
கடந்த 63 ஆண்டுகளில் தனித் தொகுதிகள் மூலம் எத்தனை தலித்துகள் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் சென்றிருப்பார்கள்? அவர்களில் எத்தனை பேர் அம்பேத்கர் போராடிப்பெற்றுத் தந்த உரிமைக்கு உழைத்து உரிய பலனைப் பெற்றுத்தந்து தலித்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார்கள்? அவர்கள் தங்களை நிறுத்தும் கட்சிகளின் தலைமையிடம் போராடி தம் மக்களின் தேவையை தீர்க்கத் தவறிவிட்டனர் என்பதுதானே உண்மை?
இதுபோக தலித் மக்களின் முன்னேற்றத்துகென தனியாக அரசியல் கட்சி தொடங்கியவர்களின் செயல்பாடுகளையும் இன்று அம்பேத்கர் பார்த்தால் மகிழ்ச்சியடைவாரா? ஆதிக்க சாதிகள் தலித் மக்களை நடத்துவதுபோலத்தான் பெரிய அரசியல் கட்சிகளும், தங்களுடன் கூட்டுசேரும் தலித் கட்சிகளையும் நடத்துகின்றன எல்லோருக்கும் கொடுத்ததுபோக கடைசியாக மீதி இருப்பதைக் கொடுத்து, முடிந்தால் வாங்கிக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் நடையைக் கட்டுங்கள் என்கின்றன. தம் மக்களின் வாக்குகளையெல்லாம் அரும்பாடுப்பட்டு வாங்கி, பெரிய கட்சிகளிடம் கொடுத்துவிட்டு ஏமாந்துபோகின்றன தலித் கட்சிகள்.
விடுதலைக்குப் பிறகு சட்டத்தின் மூலம் தலித்துகளுக்கு கிடைத்த கல்விஇடஒதுக்கீடு,வேலைவாய்ப்பில் அவர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டவில்லை என்கிறீர்களா?

 அது அண்ணல் பெற்றுத்தந்த சட்டத்தின் மூலம் மட்டுமே கிடைத்தது. ஆனால் அம்பேத்கர் பெற்றுத்தந்த தனித்தொகுதிகள் மூலம் அதிகாரம் பெற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் என்னுடைய கேள்வி. இன்று, தலித் மக்களுக்குப் பெரிய எதிரி யாரென்று பார்த்தால் முன்னேறிய தலித்துகள்தான். கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறிய தலித்துகள் அந்தக் கூட்டத்திலிருந்து தங்களை அறுத்துக்கொண்டு ஓடிவிட வேண்டும் என்பதில்தானே குறியாக இருக்கிறார்கள்! அண்ணலும் இப்படி தன்னலத்துடன் வாழ்ந்திருந்தால் இன்றைக்கு இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? நாம் முன்னேறிய மாதிரி நமது சமுதாயத்தில் நாலு பேரையாவது முன்னேற்றுவோம் என நினைக்க வேண்டும். அம்பேத்கருக்கு இருந்த பொறுமையும் காரியமாற்றும் திறனும்தான் ஒவ்வொரு தலித்துக்கும் உண்மையான விடுதலையைப் பெற்றுத்தரும். அண்ணலுக்கு சிலை வைப்பதால் மட்டுமே இது கிடைத்துவிடாது.
இந்த இடத்தில் ஒரு திரைப்படக் கலைஞராக உங்களிடம் ஒரு கேள்விஅம்பேத்கரை வார்த்தைக்கு வார்த்தை அண்ணல் என்று கொண்டாடும் நீங்களும் அம்பேத்கர் திரைப்படத்தை மக்களிடம் கொண்டுசேர்க்க தவறிவிட்டீர்களே?

ஒரு பொறுப்புள்ள மனிதனாக, கலைஞனாக என் கடமையிலிருந்து நான் தவறவே இல்லை. செயல்பட்டேன் அதற்கான பலன்தான் கிடைக்கவில்லை.. இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும், இத்திரைப்படம் வெளியானபோது தமிழ்நாட்டிலும் வெளியாகியிருக்க வேண்டும். அதற்காக அப்போது இருந்த தமிழக அரசும் பத்து லட்சரூபாய் மொழிமாற்றம் செய்ய நிதியுதவி அளித்தது. ஆனால் அப்போது யாருமே அதை வாங்கி வெளியிட முன்வரவில்லை. இறுதியாக நானே களத்தில் இறங்கி வெளியிட முயன்று தோற்றுப்போனேன். இதுபற்றிய கவலை என்றுமே எனக்குண்டு. இதுபற்றி வெளிப்படையாக என்னால் உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை.
நடந்ததெல்லாம் முடிந்துபோகட்டும். நான் சொல்வது ஒன்றை மட்டும் செய்தாலே அம்பேத்கரை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கலாம்.  ஒவ்வொரு மாணவனும் முழுமையான அம்பேத்கர் திரைப்படத்தை பார்க்க வேண்டுமென மத்திய மாநில அரசுகள் ஆணையை உருவாக்கி செயல்படுத்தட்டும். அது இளம் உள்ளங்களில் மிகப் பெரிய மனமாற்றத்தை உருவாக்கும். காட்சி ஊடகத்தின் வலிமையை புரிந்தவன் என்ற பார்வையில் இதைச் சொல்கிறேன். அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்திய பொருளாளர் அம்பேத்ராஜனைச் சந்தித்தபோது இந்திய அளவில் எல்லா மொழிகளிலும் அம்பேத்கர் திரைப்படத்தை மொழிபெயர்த்து, அதனை தொலைக்காட்சி மூலமாகவும் டிவிடி மூலமாகவும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவரும் அதனை காரியமாற்றித் தருவதாக உறுதியளித்திருக்கிறார்.
தொடர்ச்சியான உங்களது பேச்சுகளில் தமிழர்கள் குறித்த அவநம்பிக்கை அதிகமாக வெளிப்படுகிறதே?

இவர்களை எதை வைத்து நீங்கள் தமிழர்கள் என்று சொல்கிறீர்கள்? முதலில் உனது மொழி உன்னிடம் இருக்கிறதா? கேவலம் ஒருநிமிடம்கூட உன்னால் உன் சொந்த மொழியைப் பேசக்கூடத் தெரியவில்லை. மொழிக்கலப்புடன் பேசுவதை அவமானமாகக் கருதாமல், பெருமையோடு மிதப்பில் அலைகிறாய். எதைவைத்து உன்னை நீ தமிழன் எனச் சொல்கிறாய்? உன் போன்றவர்கள் மட்டுமே பெருகிவிட்ட இந்த மாநிலத்தை எதற்காக இன்னும், தமிழ்நாடு என நாக்குக் கூசாமல் அழைக்கிறாய். பேசாமல் மாநிலத்தின் பெயரை மாற்றிவிட்டால் குற்றவுணர்ச்சியில்லாமல் மகிழ்ச்சியாக எதைப்பற்றியும்  சிந்திகாமல் வாழலாமே!
தமிழா.. உன் பெயர் கூட உன் மொழியில் இல்லையே? உன் நிலம், உன் கல்வி, உன் உணவு, உன் மருத்துவம், உன் கலைகள், உன் போராட்ட குணம் எதுவுமே உன்னிடமில்லை. உன் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் தமிழில் பேசினால் தண்டனை தருகிறான். தமிழ்ப் பாடம் ஒன்றையாவது படியென்று சொன்னால், அதுவும் முடியாது என்று நீதிமன்றத்துக்குப் போகிறார்கள். இப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களில்தான் உன் குழந்தைகளைச் சேர்க்க இரவு பகலாக நாய்போல் தெருவில் காத்துகிடக்கிறாய்.
நீயே அனைத்தையும் இழந்து, தமிழன் என்ற தகுதியை இழந்து, அகதியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகு நீ எப்படி ஈழத்தமிழனுக்காக போராட முடியும்? ஈழத்தமிழனுக்கு நாடு மட்டும்தான் இல்லை. அதனால் அவன் அகதியாகிவிட்டான். உனக்கு நாடு ஒன்று மட்டும்தான் இருக்கிறது. அவனிடமிருக்கும் மொழிப்பற்று, போராட்ட குணம், அரசியல் தெளிவு எதுவுமே உன்னிடம் இல்லை. ஒருநாள் ஈழத்தமிழனுக்கு இழந்த மண் கிடைக்கும். ஆனால் நீ இழந்த எதுவுமே உனக்கு கிடைக்கப்போவதில்லை!

2 comments:

  1. Gowtham Raaj :
    மனித இனத்தின் முதன்மை அடையாளம் மொழி.. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் வாழ்வின் அத்தனைக் கூறுகளையும் உருவாக்கிக்கொள்ளமுடியும். தாய் மொழி பற்றிய அடிப்படை அறிவே இல்லாதவர்களோடுதான் வாழ வேண்டியிருக்கிறது.
    தொடர்ந்தது உங்களின் சிந்தனைகளை படைப்புகள் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் கவனித்துவருகிறேன்.உங்கள் நேர்மையான,நியாயமான கருத்துக்கள் எப்பொழுதும் அதிர்வை ஏற்படுத்துபவை . அதேபோல் இந்த நேர்காணலும் அதன் வேலையை செய்திருக்கின்றது.பல பேருடன் இதுபற்றி விவாதித்தேன். பாவமாக இருக்கிறது. உருப்படாத படங்களில் ஒரே ஒரு கட்சியில் தோன்றி மறையும் சினிமா நடிகர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களைப் பார்த்து பல் இளிக்கின்ற இவர்கள் உங்களைபோன்ற படைப்புப் போராளிகலின் கருத்துக்களை உணராமல் போவதில் வியப்பேதுமில்லை.வடநாட்டு நடிகை கட்சியிலிருந்து விலகியதுதான் இப்போது தமிழர்களின் பேச்சாக இருக்கிறது. இந்த சமுதயத்தை எப்படி மாற்றப் போகிறோம்?.உங்களின் பதிலைப் புரிந்து கொள்ளமுடியாமல் தடுமாறி குழம்பிப்போகிறார்கள்.
    பலரது பிரச்சினையே நீங்கள் தமிழன்தானா, உங்கள் பெயர் தமிழ் பெயர்த்தானா என்பது மட்டுமே. என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. முப்பதாண்டுகாலங்கள் கழிந்ததுபோக இன்னும் எத்தனை காலததுக்குத்தான் இப்படிப்பட்டவர்களிடம் உங்களின் பெயருக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறீர்கள் . வெவ்வேறு பிரச்சினைகள் குறித்து வெவ்வேறு கேள்விகளுக்கான உங்களின் பதிலைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறுவதை நானும் உண்ர்கிறேன். பாவம் இந்த பாழாய்ப்போன super தமிழர்கள்!!

    ReplyDelete
  2. செருப்படி பதில்கள். Salute Thangar.

    ReplyDelete